கொச்சி: கரோனா முதல் அலையின்போது, இணை நோய் இருப்பவர்கள் மற்றும் முதியவர்களுக்கு மட்டுமே கரோனா தொற்று அபாயத்தை ஏற்படுத்திய நிலையில், இளம் நோயாளிகளையும் கரோனா இரண்டாவது அலை விட்டுவைக்கவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா இரண்டாவது அலையின்போது, தொற்று பாதித்த இளம் வயது நபர்களும் மரணத்தைத் தழுவியது முன்களப் பணியாளர்களுக்கும், குடும்பத்தினருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கேரளத்தில், கடந்த மே மாதத்தில் மட்டும் 30 வயதுக்குட்பட்ட 40 இளைஞர், இளைஞிகள் கரோனாவால் பாதிக்கப்பட்டு இன்னுயிரை இழந்துள்ளனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் பலரும் வீட்டிலிருந்தே சிகிச்சை பெற்று வந்தவர்களாகும்.
அதுமட்டுமல்ல, கேரள மாநிலத்தில் கடந்த மே மாதத்தில் மட்டும் 3,500 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இது அந்த மாநிலத்தின் மொத்த பலி எண்ணிக்கையில் 40 சதவீதமாகும். மே மாத மத்தியில் பலி எண்ணிக்கை மூன்று இலக்கங்களை எட்டியபோது, அதில் 31 - 40 வயதுக்குட்பட்டவர்கள் அதிகமாக இருந்தனர்.
இளம் வயதினராக இருந்தாலும் தாமதமான பரிசோதனை, சிகிச்சையை சரியாக மேற்கொள்ளாதது போன்றவையே மரணத்தைத் தழுவக் காரணங்களாக உள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.