ஹரியாணா மாநிலத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் நடப்பாண்டு தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது
கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது.
எனினும் கரோனா தொற்று பரவல் நிலைகளுக்கேற்ப பள்ளிகள் திறக்கப்பட்டு கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டன. தற்போது மீண்டும் அதிகரித்த நிலையில் ஹரியாணா மாநிலத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக மாநில அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது.
இதற்கான அறிவிப்பை பள்ளிக்கல்வித் துறை தலைவர் ஜக்பீர் சிங் அறிவித்தார். மாணவர்களுக்கான மதிப்பெண்கள் இடைக்காலத் தேர்வுகள் மூலம் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக இருந்த 10ஆம் வகுப்புக்கான தேர்வுகள் நிறுத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.