ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலம் மகாசமுந்த் மாவட்டத்தில், குடும்பச் சண்டையில் விரக்தி அடைந்த தாய் மற்றும் 5 பெண் குழந்தைகள் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மகாசமுந்த் மற்றும் பெல்சோண்டா ரயில் நிலையங்களுக்கு இடையே புதன்கிழமை நள்ளிரவில் இந்தச் சம்பவம் நடந்திருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில், பலியான பெண் உமா சாஹு (45) என்பதும், பெம்சா கிராமத்தைச் சேர்ந்த இவருக்கும், இவரது கணவருக்கும் குடும்பச் சண்டை இருந்ததும் தெரிய வந்தது.
இந்த நிலையில்தான், உமா தனது 10 வயது முதல் 18 வயதுடைய ஐந்து பெண் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு ரயில் தண்டவாளப் பகுதிக்கு வந்து, அங்கே ரயில் வரும் போது, தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து கிராம மக்கள் அளித்த தகவலின்பேரில் விரைந்து வந்த காவல்துறையினர், உடல்களைக் கைப்பற்றி உடற்கூராய்வு செய்ய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.