ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை என தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தூத்துகுடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் அளித்த காலஅவகாசம் நாளையுடன் முடிவடையவுள்ளது. இந்நிலையில், ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய கால நீட்டிப்பு கேட்டு வேதாந்த நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தது.
இந்த வழக்கில் ஆஜரான தமிழக அரசு தரப்பு, தற்போது ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லாததால் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆக்ஸிஜன் உற்பத்தி காலஅவகாசம் நீட்டிக்க அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க | சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியீடு
இதையடுத்து வழக்கின் விசாரணையை அடுத்த வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், அதுவரை தற்போது செய்யப்படும் உற்பத்தி தொடரும் எனத் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வந்த நிலையில், ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற படுக்கை வசதிகள் இல்லாமலும், ஆக்ஸிஜன் தட்டுப்பாடு காரணமாக உயிர் இழக்கும் சூழல் உருவாகியது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.