அஸ்ஸாம்-மிஸோரம் எல்லைப் பிரச்னை மோதல் விவகாரம் தொடர்பாக இரு மாநில தலைமைச் செயலர்களுடன் மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.
அஸ்ஸாம்-மிஸோரம் இடையேயான எல்லைப் பிரச்னை விவகாரத்தில், இரு மாநிலங்களின் காவல் துறையினருக்கும் இடையே கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற மோதலில் அஸ்ஸாம் காவலர்கள் 5 பேரும் பொது மக்களில் ஒருவரும் உயிரிழந்தனர்; 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த மோதல் சம்பவத்துக்கு அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா, மிஸோரம் முதல்வர் ஜோரம் தங்கா ஆகியோர் பரஸ்பரம் குற்றஞ்சாட்டிக் கொண்டனர். முதல்வர்கள் இருவரையும் திங்கள்கிழமை இரவு தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எல்லையில் அமைதியான சூழல் நிலவுவதை உறுதிப்படுத்துமாறு இருவருக்கும் வலியுறுத்தினார்.
இந்த நிலையில் இரு மாநில தலைமைச் செயலர்களுடன் மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.
இதுபற்றி உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தது:
"அஸ்ஸாம், மிஸோரம் எல்லையில் காவல் படைகள் இடையே ஜூலை 26-இல் ஏற்பட்ட மோதல் குறித்து இருமாநில தலைமைச் செயலர்களுடன் மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டம் மாலை 4 மணிக்குத் தொடங்கி சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்றது.
இரு மாநில அரசுகளும் பிரச்னையை இணக்கமான முறையில் சரிசெய்து கொள்வதாக ஒப்புக்கொண்டனர்."