ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையிலும் ’மனதின் குரல்’ நிகழ்ச்சி ஒலிபரப்பு செய்யப்படுகிறது. இந்நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அந்த வகையில் இந்த மாதத்திற்கான மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பேசினார்.
அப்போது, "ஒலிம்பிக்ஸ் போட்டியில் கலந்து கொண்டுள்ள இந்திய அணிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் 'விக்டரி பஞ்ச்' என்னும் பரப்புரை சமூக வலைதளத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பரப்புரையின் மூலம் இந்திய அணியை நீங்களும் உற்சாகப்படுத்த வேண்டும். துணிச்சல் மற்றும் பாதுகாப்பு படை வீரர்களின் ஒழுக்கத்தின் அடையாளமே கார்கில் போர்.
இதற்கு உலகமே சாட்சி. கார்கில் விஜய் திவாஸ் நாளை கொண்டாடப்படவுள்ளது. எனவே, கார்கில் போர் வீரர்களுக்கு நாம் நமது வீர வணக்கத்தை செலுத்தி கொள்வோம். மனதின் குரல் நிகழ்ச்சிக்கு யோசனைகளை கூறும் 75 சதவிகிதத்தினர் 35 வயதுக்கு உட்பட்டவர்கள். இந்நிகழ்ச்சிக்கு இளைஞர்கள் வழிகாட்டுவது இதன்மூலம் தெரியவருகிறது.
மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நேர்மறை கருத்துகளும் அறிவாற்றாலும் பரப்பப்படுகிறது. இப்போதெல்லாம், மணிப்பூர் உக்ருல் பகுதியில் ஆப்பிள் சாகுபடி பிரபலமடைந்துவருகிறது. இதற்காக, இமாச்சலப் பிரதேசத்திற்கு சென்று பயிற்சி எடுத்து கொள்கிறார்கள். அதில் ஒருவர் ரிங்ஃபாமி. இவர் ஒரு ஏரோநாட்டிகல் இன்ஜினியர்.
கரோனாவுக்கு பிறகு, பெர் பழத்தின் சாடுபடி அதிகரித்துள்ளது. திரிபுரா உனகோடியை சேர்ந்த இளம் நண்பரான பிக்ரம்ஜித் சக்மா பெர் விவசாயம் மேற்கொண்டு லாபம் சம்பாதித்துள்ளார். அதுமட்டுமின்றி, மற்றவர்களையும் ஊக்குவிக்கிறார்.
தமிழ்நாடு நீலகிரியில் ராதிகா சாஸ்திரி என்பவர், அம்பர்க்ஸ் திட்டத்தை தொடங்கியுள்ளார். மலைப்பகுதிகளில் உள்ள நோயாளிகளுக்கு போக்குவரத்து வசதிகள் எளி்தாக கிடைப்பதை இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. அவர் நடத்தும் சிற்றுண்டியில் பணிபுரியும் நண்பர்களிடமிருந்து நிதி திரட்டியுள்ளார். இதனால், தற்போது, ஆறு அம்பர்க்ஸ் வண்டிகள் மூலம் அவர் செய்து வருகிறார்" என்றார்.