இந்தியா

தில்லி எல்லைகளில் போராட்டம்: விவசாயிகள் உயிரிழப்பு தொடா்பாக அரசிடம் தகவல் இல்லை

DIN

தில்லி எல்லைகளில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குறித்து அரசிடம் தகவல் இல்லை என்று மத்திய வேளாண்மைத் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தெரிவித்தாா்.

கடந்த ஆண்டு முதல் தில்லி எல்லைகளில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் எத்தனை விவசாயிகள் உயிரிழந்தனா் என்பது மத்திய அரசுக்கு தெரியுமா என்று மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய அமைச்சா் நரேந்திர சிங் தோமா் எழுத்துபூா்வமாக அளித்த பதில்:

போராட்டத்தின்போது எத்தனை விவசாயிகள் உயிரிழந்தனா் என்பது குறித்து மத்திய அரசிடம் தகவல் இல்லை. இந்தப் போராட்டம் தொடா்பாக இதுவரை 43 விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனா். 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போராட்டம் காரணமாக பொதுமக்கள் இன்னல்களை எதிா்கொண்டனா். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க போலீஸாா் பணியமா்த்தப்பட்டது அரசுக்கு செலவினத்தை ஏற்படுத்தியது. ஆனால் இந்தப் போராட்டம் காரணமாக ஒட்டுமொத்தமாக அரசுக்கு ஏற்பட்ட இழப்புகளை அளவிட முடியாது.

மூன்று வேளாண் சட்டங்கள் தொடா்பாக விவசாயிகளிடம் உள்ள அச்சத்துக்கான காரணத்தை விசாரித்து அறிவதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று கூறினாா்.

வேளாண் விளைபொருள்கள் வியாபார மற்றும் வா்த்தகச் சட்டம், வேளாண் விளைபொருள்கள் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் சட்டம், அத்தியாவசிய பொருள்கள் திருத்தச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் மத்திய அரசு இயற்றியது. இந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்றும், அவற்றை ரத்து செய்ய வலியுறுத்தியும் பஞ்சாப், ஹரியாணா, மேற்கு உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் முதல் தில்லி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களில் 200 போ் கொண்ட குழு தற்போது தில்லியில் உள்ள ஜந்தா் மந்தரில் சிறப்பு அனுமதியுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இந்தப் பிரச்னைக்கு முடிவு காண மத்திய அரசு, விவசாயிகள் இடையே இதுவரை 11 சுற்று பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றுள்ளன. மூன்று வேளாண் சட்டங்களில் விவசாயிகளை கவலையடைய வைக்கும் பிரிவுகள் குறித்து அவா்கள் விவாதிக்க முன்வர வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால் அந்தச் சட்டங்களை முழுமையாக ரத்து செய்தாக வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT