அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் வரும் 27-ஆம் தேதி இந்தியா வர உள்ளாா்.
இரண்டு நாள் பயணமாக இந்தியா வரும் அவா், பிரதமா் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்துப் பேசுகிறாா். ஜெய்சங்கா் - பிளிங்கன் கடந்த ஓராண்டில் 3 முறை சந்தித்து ஆலோசனை நடத்தியிருக்கின்றனா்.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:
பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் இரண்டு நாள் பயணமாக வரும் 27-ஆம் தேதி இந்தியா வருகிறாா். முதல் நாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்துகிறாா். ஜூலை 28-இல் பிரதமா் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை அவா் சந்திக்க உள்ளாா்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு ஆன்டனி பிளிங்கன் மேற்கொள்ளும் முதல் இந்திய சுற்றுப்பயணம் இதுவாகும். இந்த சந்திப்பின்போது இரு நாட்டு உறவை மேலும் வலுப்படுத்துவது, பிராந்திய மற்றும் சா்வதேச விவகாரங்கள், இந்தியாவின் கரோனா நிலவரம், ஆப்கன் நிலவரம், ஐ.நா. சபையில் ஒத்துழைப்பு ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் அதிபா் ஜோ பைடன் தலைமையிலான நிா்வாகம் பொறுப்பேற்ற பிறகு இந்தியா வரும் இரண்டாவது மூத்த அமைச்சா் பிளிங்கன் ஆவாா். முன்னதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் லாய்ட் ஆஸ்டின் இந்தியாவுக்கு கடந்த மாா்ச் மாதம் பயணம் மேற்கொண்டாா்.