ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள இந்திய விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த கலந்துரையாடலில்,
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சர் அனுராக் தாகூர், இணை அமைச்சர் நிசித் பிரமனிக், சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
இதில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன், சரத்கமல் ஆகியோர் பிரதமர் உடனான கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
இதில் பேசிய இளவேனில், சிறிய வீராங்கனையாக தொடங்கி ஒலிம்பிக் வரை தகுதி பெற்று சர்வதேச போட்டிகளுக்குச் செல்வது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார்.
இதில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், பேட்மிண்டர் வீராங்கனை பி.வி.சிந்து, தீபிகா குமாரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பிரதமருடன் கலந்துரையாடினர்.
இந்தியாவில் இருந்து 18 விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க மொத்தம் 126 வீரர்கள் டோக்கியோ செல்லவுள்ளனர். இது, ஒலிம்பிக் போட்டிகளுக்குச் செல்லும் மிகப் பெரிய இந்திய குழுவாகும்.
டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டிகளுக்குச் செல்லும் இந்திய விளையாட்டு வீரர்கள் குழுவினரின் வசதிகளுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அண்மையில் பிரதமர் ஆய்வு மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.