தில்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து ட்விட்டர் நிறுவனம் 550 ட்விட்டர் கணக்குகளை நீக்கியுள்ளது.
தில்லியில் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை நடத்திய டிராக்டர் பேரணியில் ஆங்காங்கே வன்முறை வெடித்ததால் தலைநகர் தில்லி போர்க்களமாக மாறியது. காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறி சென்றதால் காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் விவசாயிகளின் பேரணியை கலைக்க முற்பட்டனர். ஆனால், செங்கோட்டை வரை பேரணி நடைபெற்றது. மேலும், வன்முறையை அடுத்து இணைய சேவை துண்டிப்பு, 144 தடை உத்தரவு என நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதில் காவல்துறையினர் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது. விவசாயிகள் தரப்பில் ஒரு உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தில்லி வன்முறை தொடர்பாக பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் நிறுவனம் 550 ட்விட்டர் கணக்குகளை நீக்கி அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஊடகக் கொள்கையை மீறுவதாகக் கண்டறியப்பட்ட ட்வீட்களையும் நீக்கியுள்ளது.
வன்முறை, அச்சுறுத்தல் போன்று நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் படியான கருத்துகள், மற்றும் அவர்களது கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தில்லி வன்முறை குறித்து நாங்கள் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். விழிப்புடன் இருக்கிறோம். விதிமுறைகளை மீறும் கணக்குகள் குறித்து பயனர்கள் புகார் அளிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.