நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களில் 38 சதவிகிதத்தினர் வீட்டிலிருந்து வேலை செய்வதையே விரும்புவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
தகவல் தொழில்நுட்பத்துறையில் பணிபுரியும் ஆண்கள், பெண்களிடையே 2020-ஆம் ஆண்டில் நவம்பர் - டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த முடிவுகள் தெரியவந்துள்ளன.
'தொழில்நுட்பத்துறையில் பெண்கள்' என்ற தலைப்பின் கீழ் இணைய பாதுகாப்பு நிறுவனமாக கேஸ்பர்ஸ்கை நடத்திய ஆய்வில், 36 சதவிகித பெண்கள் வீட்டிலிருந்து புரியும்போது தன்னதிகார தன்மையை உணர்வதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
வீட்டிலிருந்து பணிபுரியும்போது 54 சதவிகித பெண்கள் அலுவலக பணியுடன் வீட்டு வேலைகளையும் முடித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று 40 சதவிகித ஆண்களுடன் ஒப்பிடும்போது 54 சதவிகித பெண்கள் குழந்தைகளுக்கான வீட்டுப் பாடங்களை நடத்தும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
பணியின்போதே வீட்டு வேலைகளையும் செய்வதால், 50 சதவிகித பெண்கள் தங்களது சக ஆண் பணியாளர்களை விட அதிக பணிநேரத்தை எடுத்துக்கொள்கிறனர் என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் 76 சதவிகித பெண்கள் கரோனா பெருந்தொற்றால் தங்களது தொழில்துறை முன்னேற்றம் தேக்கமடைந்துள்ளதாகவும் கருதுகின்றனர்.
கரோனா பொதுமுடக்கத்தின்போது இரு பாலினத்தவர்களுக்கும் விருப்பமான நேரங்களில் பணிபுரிய நிறுவனங்கள் விதிமுறைகளை மாற்றியமைத்ததாக அடா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், துணை நிறுவனருமான மெரிக் வின்டன் தெரிவித்துள்ளார்.
பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு மிகவும் சாதகமான சூழலை உருவாக்கி பாதுகாப்பை உறுதிசெய்தால், அது சமூகத்திலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கேஸ்பர்ஸ்கை நிறுவனத்தின் உலகளாவிய விற்பனை பிரிவின் துணைத்தலைவர் நவ்மோவா தெரிவித்துள்ளார்.