வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் எம். பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இந்த நாட்டை அமைதியான முறையில் வழிநடத்த வேண்டும்'- என்ற மகாத்மா காந்தியின் கூற்றை குறிப்பிட்டு வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை மோடி அரசுக்கு மீண்டும் ஒருமுறை முன்வைக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.
தில்லியில் விவசாயிகள் குடியரசு நாளன்று(செவ்வாய்க்கிழமை) நடத்திய டிராக்டர் பேரணியில் ஆங்காங்கே வன்முறை வெடித்ததால் தலைநகர் தில்லி போர்க்களமாக மாறியது. போலீஸாரின் தடுப்புகளை உடைத்தெறிந்து பேரணியாகச் செல்ல விவசாயிகள் முயற்சி செய்ததால், தடியடி-கண்ணீர்ப்புகை குண்டுவீச்சு என்ற அளவுக்கு நிலைமை மோசமானது.
பேருந்துகள், போலீஸாரின் வாகனங்கள், அரசுப் பேருந்துகள் ஆகியவை சேதப்படுத்தப்பட்டன. வன்முறையில் காவல்துறையினர் 300 பேர் காயமடைந்துள்ளதாக தில்லி காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல டிராக்டர் கவிழ்ந்து விவசாயி ஒருவர் பலியானார்.
தில்லியில் நடந்த வன்முறைக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் விவசாயிகள் இல்லை என்றும் வன்முறைக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன. தில்லியில் வன்முறைக்கு மத்திய அரசே காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.