இந்திய அரசியலமைப்பின் முகவுரையை நாட்டின் குடிமக்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தனது குடியரசு தின வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
மூன்று நாள் பயணமாக ஆமதாபாத் சென்றுள்ள மோகன் பாகவத், மணி நகரில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தேசியக் கொடியேற்றினார். அப்போது அவர் பேசியதாவது: "குடியரசு நன்னாளில் நாட்டின் குடிமக்கள் அனைவரும் அரசியலமைப்பின் முகவுரையைப் படிக்க வேண்டும். எந்த இலக்கை நோக்கி நாட்டை நாம் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை அது விளக்குகிறது.
குடியரசு நாளில் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தும்போது ஒலிக்கும் தேசிய கீதம், கண் முன்னே நம் நாட்டின் வரைபடத்தை வரைகிறது. "ஜன கண மன' என்று பாடும்போது பஞ்சாப், சிந்து, குஜராத், மராட்டியம் போன்ற பல்வேறு பகுதிகளை காட்சிப்படுத்துவதுடன் அவற்றின் எல்லைகளையும் நம் கண் முன்னே வரைகிறது.
அதேபோல் தேசியக் கொடியின் மூன்று வண்ணங்களையும் நம் முன்னே வைத்திருப்பதன் மூலம் நாட்டை முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்ல முடியும்.
காவி வண்ணம் நெருப்பை உள்ளடக்கியது. நெருப்பு எல்லாவற்றையும் உள்வாங்கக் கூடியது.
இது துறவு மற்றும் உழைப்பின் வண்ணமாகும். வெள்ளை வண்ணத்தின் அர்த்தம், நாட்டுக்காக பணியாற்றுவதற்கு நாம் களங்கமற்ற குணத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதாகவும், பச்சை வண்ணம் செல்வத்தைக் குறிப்பதாகவும் உள்ளது' என்றார் அவர்.