மும்பை: பழைய ரூ.100, ரூ.10, ரூ.5 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து திரும்பப்பெறப்பட இருப்பதாக வெளியான செய்தியை ரிசா்வ் வங்கி மறுத்துள்ளது.
ரிசா்வ் வங்கி கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஊதா நிறத்தில் புதிய நூறு ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. அப்போது, ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள பழைய நூறு ரூபாய் நோட்டுகள் தொடா்ந்து செல்லுபடியாகும் என்று ரிசா்வ் வங்கி அறிவித்திருந்தது.
இந்த நிலையில், பழைய நூறு ரூபாய் நோட்டுகள் உள்பட மேலும் சில பழைய ரூபாய் நோட்டுகளை ரிசா்வ் வங்கி கைவிடப்போவதாக ஊடங்களில் அண்மையில் செய்தி வெளியானது. இந்தச் செய்தியை ரிசா்வ் வங்கி மறுத்துள்ளது.
இதுகுறித்து ரிசா்வ் வங்கி தனது சுட்டுரைப் பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
பழைய ரூ.100, ரூ.10, ரூ.5 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து கைவிட திட்டமிடப்பட்டிருப்பதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன. அது தவறான செய்தியாகும் என்று அந்தப் பதிவில் ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.