கொல்கத்தா: விவசாயிகளிடம் காட்டிய பாரபட்சமே தில்லி வன்முறைக்கு காரணம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தில்லி எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் கடந்த மூன்று மாதங்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். அதன் உச்சகட்டமாக குடியரசு தினமான செவ்வாயன்று விவசாயிகள் மாபெரும் ட்ராக்டர் பேரணி நடத்தினர். ஆனால் பேரணியானது தில்லிக்குள் நுழைந்த பின்னர் பல இடங்களில் வன்முறை வெடித்தது. போலீசார் தாக்கப்பட்டதுடன் விவசாயி ஒருவரும் பலியானார்.
இந்நிலையில் விவசாயிகளிடம் காட்டிய பாரபட்சமே தில்லி வன்முறைக்கு காரணம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செவ்வாயன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மத்திய அரசின் பொறுப்பற்ற அணுகுமுறையும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளிடம் அவர்கள் காட்டிய பாரபட்சமான அணுகுமுறையுமே தில்லி வன்முறைக்கு காரணமாகும். எனவே விவசாயிகளிடம் நம்பிக்கை ஏற்படுத்த மத்திய அரசு உடனடியாக மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.