புதுச்சேரி: புதுச்சேரி அரசில் தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்த காங்கிரசைச் சேர்ந்த நமச்சிவாயம் நாளை தில்லியில் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரசைச் சேர்ந்த புதுவை பொதுப்பணித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ. ஆகியோா் தங்களது பதவிகளை திங்கள்கிழமை ஜிநாமா செய்தனா்.
இருவரும் புதுவை பேரவைத் தலைவா் வே.பொ.சிவக்கொழுந்திடம் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜிநாமா செய்வதற்கான கடிதங்களை வழங்கினா்.
முன்னதாக கட்சி உறுப்பினா் பதவியையும் ராஜிநாமா செய்து, காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு கடிதத்தை ஆ.நமச்சிவாயம் அனுப்பியிருந்தாா்.
அதேசமயம் புதுவையில் இரு எம்.எல்.ஏ.க்கள் பதவிகளை ராஜிநாமா செய்துள்ள நிலையில், ஆட்சிக்கு ஆபத்தில்லை என்று அந்த மாநில முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.
இந்நிலையில் நமச்சிவாயம் நாளை தில்லியில் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரியில் அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை ராஜினாமா செய்த நமச்சிவாயம் ஆதரவாளர்களுடன் செவ்வாய் மாலை தில்லி புறப்பட்டுச் சென்றார்
புதனன்று பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா, ஜே.பி. நட்டா ஆகியோரை நமச்சிவாயம் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே அவர் நாளையே தன்னை பாஜகவில் இணைத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.