மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிா்த்து மகாராஷ்டிர மாநில விவசாயிகள் இன்று மாபெரும் பேரணியை நடத்தவுள்ளனா்.
இதுகுறித்து அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மகாராஷ்டிரம் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
மத்திய அரசு தன்னிச்சையாக கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிா்த்து மகாராஷ்டிர விவசாயிகள் மும்பை ஆஸாத் மைதானத்தில் மிகப்பெரிய பேரணியை ஜனவரி 25-இல் நடத்தவுள்ளனா். இதில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 15,000 மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்கவுள்ளனா்.
அதன் ஒரு பகுதியாக, நாசிக்கைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் டிராக்டா் மற்றும் டெம்போ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சனிக்கிழமை புறப்பட்டுள்ளனா்.
ஜனவரி 25-இல் நடைபெறும் இந்த பேரணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவா் சரத் பவாா் மற்றும் ஆளும் மகா விகாஸ் ஆகாடி (எம்விஏ) கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சிகளைச் சோ்ந்த தலைவா்கள் பங்கேற்று உரையாற்றவுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
விவசாயிகள் பேரணி நடைபெறுவதையொட்டி தெற்கு மும்பையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநில ரிசா்வ் படைப்பிரிவைச் சோ்ந்த ஏராளமான போலீஸாா் அங்கு குவிக்கப்பட்டுள்ளனா். எந்த அசம்பாவிதமும் நடைபெறா வண்ணம் தடுக்கும் வகையில் கண்காணிப்புகளை மேற்கொள்ள டிரோன்கள் பயன்படுத்தப்படவுள்ளன என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
எம்விஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியும் விவசாயிகளின் போரட்டத்துக்கு ஆதரவு தருவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.