விவசாயிகளின் நலன்களில் அரசு உறுதி பூண்டுள்ளதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திங்கள்கிழமை தெரிவித்தார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியது:
"பரந்த மற்றும் மக்கள் தொகை அதிகமுள்ள நம் நாட்டில் உணவு தானியங்கள் மற்றும் பால் பொருள்களில் சுயசார்பை அடைய காரணமாக இருக்கும் விவசாயிகளுக்கு ஒவ்வொரு இந்தியரும் தலைவணங்குகின்றனர். கரோனா பெருந்தொற்று உள்பட பல்வேறு இடர்களுக்கு மத்தியிலும் வேளாண் உற்பத்தியை விவசாயிகள் நிலைநாட்டி வந்தனர்.
விவசாயிகளின் நலன்களுக்கு ஒட்டுமொத்த நாடே உறுதி பூண்டுள்ளது. நாட்டின் உணவுப் பாதுகாப்பை கடின உழைப்பு மூலம் விவசாயிகள் உறுதி செய்வதுபோல் பல்வேறு கடினமான சூழல்களிலும் இந்திய ராணுவப் படையினர் எல்லையில் பாதுகாப்பை உறுதி செய்கின்றனர்.
சீர்திருத்தங்களின் தொடக்க காலத்தில் தவறான புரிதல்கள் ஏற்படலாம். ஆனால், விவசாயிகளின் நலன்களில் அரசு அர்ப்பணிப்புடன் இருப்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
விண்வெளி முதல் வேளாண் வரை, கல்வி நிறுவனங்கள் முதல் மருத்துவமனைகள் வரை நமது வாழ்க்கையை விஞ்ஞானிகள் செறிவூட்டியுள்ளனர். இரவு பகலாக உழைத்து குறுகிய காலத்தில் கரோனா தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதில் வெற்றி கண்டுள்ளனர்.
வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் நம் நாட்டில் கரோனா வைரஸ் பரவல் மற்றும் இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்தியதில் விஞ்ஞானிகளுக்கும் பெரும் பங்கு உள்ளது. அனைத்து விவசாயிகள், ராணுவ வீரர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு இந்த நன்னாளில் சிறப்பு பாராட்டுகளைப் பெறுவதற்கான தகுதி உள்ளது."