வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுக்கு மத்திய அரசு சிறந்த சலுகைகளை வழங்கியுள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாய அமைப்புகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே 11 சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றும் முடிவுகள் எட்டப்படவில்லை.
இந்நிலையில், மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், புதிய வேளாண் சட்டங்களை ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பதற்கான அரசின் முன்மொழிவை 'சிறந்த சலுகை' என்று குறிப்பிட்டார்.
எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாய சங்கங்கள் விரைவில் மறுபரிசீலனை செய்து தங்கள் முடிவை தெரிவிக்கும் என்று நம்புவதாகக் கூறிய அவர், விவசாயிகளின் பதிலுக்கு ஏற்ப அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வோம் என்று தெரிவித்தார்.
இதுவரை மத்திய அரசு கூறிய பரிந்துரைகள், வரைமுறைகளை விவசாய சங்கங்கள் ஏற்க மறுத்தன. மேலும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நாளை குடியரசு தினத்தன்று மாபெரும் டிராக்டர் பேரணி நடத்தவுள்ளனர்.