வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்துங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடியின் தாயாருக்கு விவசாயி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் தில்லி எல்லையில் 59 நாள்களாக நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய தங்கள் மகனிடம் வலியுறுத்துங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபின் மோடிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ''வேளாண் சட்டங்களை ரத்து செய்ய தங்கள் மகனிடம் வலியுறுத்த வேண்டும் என விவசாயி ஆகிய நான் தங்களிடம் கோரிக்கை வைக்கிறேன். யாருடைய கோரிக்கையினையும் மகன் நிராகரிக்கலாம். ஆனால் ஒரு தாயின் கோரிக்கையை மகனால் நிராகரிக்க இயலாது.
தாங்கள் அவ்வாறு செய்தால் இந்த நாடே உங்களுக்கு நன்றி கூறி வணங்கும். ஒரு தாயாக தங்கள் மகனிடம் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்துங்கள்'' என்று தெரிவித்துள்ளார்.