நாட்டில் இதுவரை 16,00,000-க்கும் அதிகமான சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய கரோனா தடுப்பூசித் திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கரோனாவுக்கு எதிராக முன்னின்று போராடிய மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி இப்போது செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இதுவரை 16,00,000-க்கும் அதிகமான சுகாதார பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், நாடு தழுவிய மிகப்பெரும் கொவைட்-19 தடுப்பூசித் திட்டத்தின் ஒன்பதாம் நாளில் 5 மாநிலங்களில் 31, 000-க்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர். இன்று மாலை 7:30 மணி வரை தமிழகம் (2,494), ஹரியாணா (907), கர்நாடகம் (2,472), பஞ்சாப் (1,007), ராஜஸ்தான் (24,586) ஆகிய 5 மாநிலங்களில் 31,466 பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
மாலை 6:30 மணி வரை 693 முகாம்கள் நடைபெற்றன. இன்று மாலை 7:30 மணி வரை இது வரை மொத்தமாக 28,613 முகாம்களில் 16 லட்சத்திற்கும் அதிகமான (16,13,667) சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை 61,720 பயனாளிகள் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டுள்ளனர். இன்று மாலை 7:30 மணி வரை தடுப்பு மருந்து எடுத்துக் கொண்டவர்களில் வெறும் 10 பேருக்கு சிறிய அளவிலான உபாதைகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.