மகாராஷ்டிர அமைச்சர் தனஞ்சய் முண்டே மீதான பாலியல் வழக்கை மும்பையைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் வாபஸ் பெற்றார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக தற்போதைய மகாராஷ்டிர சமூக நீதித்துறை அமைச்சர் தனஞ்சய் முண்டே மீது மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல்துறையில் பாலியல் புகார் அளித்துள்ளார். கடந்த ஜனவரி 11 ஆம் தேதி ஓஷிவாரா காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்த அவர், இன்று வழக்கை வாபஸ் பெற்றதாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
முண்டே மீதான புகாரைத் திரும்பப் பெறுவதாக அந்தப் பெண் எந்தக் காரணத்தையும் குறிப்பிடவில்லை என்று தெரிவித்த அவர், பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு பெண்ணுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகக் கூறினார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முண்டே, பெண்ணின் புகாரை மறுத்த அதேவேளையில், புகார் அளித்த பெண்ணின் சகோதரியுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறியுள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் முண்டேவை கட்சியிலிருந்தும், அமைச்சர் பதவியிலிருந்தும் நீக்குமாறு பாஜக கோரிக்கை விடுத்தது. எனினும் தற்போது புகார் அளித்த பெண் வழக்கை வாபஸ் பெற்றதால் குற்றம் நிரூபிக்கப்படாததால் தேசியவாத காங்கிரஸ் கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.