வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் இனிப்புக்குள் நஞ்சு வைப்பது போன்று மத்திய அரசு செயல்படுவதாக விவசாய சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்பதற்காக மறைமுகமான வேலைகளை மத்திய அரசு செய்து வருவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பேசிய கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் கமிட்டியைச் சேர்ந்த பந்தேர், ''இனிப்புக்குள் நஞ்சு வைப்பது போன்று வேளாண் சட்டங்களை நீர்த்துப்போகச் செய்யும் வகையிலான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுவருகிறது.
விவசாயிகளின் போராட்டத்தை கலைத்துவிட வேண்டும் என்பதில் மத்திய அரசு குறிக்கோளாய் உள்ளது. மத்திய அரசின் முன்மொழிவை நிராகரிக்க வேண்டும் என்று எங்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது'' என்று கூறினார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான தில்லி நகரின் பல்வேறு எல்லைகளில் ஹரியாணா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசுடன் ஏற்கெனவே 10 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், அதில் எந்தவித உடன்பாடும் எட்டப்படாத நிலையில், இன்று 11-ம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.