தெலங்கானாவில் நலகொண்டா மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளதாக காவல்துறையினர் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
நலகொண்டா மாவட்டம் அங்காடிபேட்டை அருகே வியாழக்கிழமை ஷேர் ஆட்டோவுடன் - லாரி ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில் இன்று மேலும் 2 பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 11 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நலகொண்டா மாவட்டம் சிந்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்ததது.
சம்பவம் நிகழ்ந்தபோது லாரி ஓட்டுநர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்குச் சிறந்த சிகிச்சையை வழங்குமாறு மருத்துவ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.