மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான ரஞ்சன் கோகாய்க்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள தலைவர்கள் மற்றும் அரசின் முக்கியப் பொறுப்பில் உள்ள அதிகாரிகளுக்கு தேசிய பாதுகாப்பு காவலர்படையினால் பாதுகாப்பு வழங்கப்படும். இந்த இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பின் கீழ் ஆயுதமேந்திய சிஆர்பிஎஃப் படை வீரர்கள் பாதுகாப்பு வழங்குவர்.
இந்நிலையில் மாநிலங்களவை உறுப்பினரும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான ரஞ்சன் கோகாய்க்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் எந்தப் பகுதியிலும் பயணம் மேற்கொண்டாலும் ஆயுதமேந்திய காவலர்கள் ரஞ்சன் கோகாய்க்கு பாதுகாப்பு வழங்குவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 நவம்பரில் ஓய்வு பெற்ற அவர் பின்னர் நாடாளுமன்றத்தின் மேல் சபைக்கு மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.