கர்நாடகத்தில் கல் குவாரி விபத்து தொடர்பாக அதன் உரிமையாளர் மற்றும் வெடிமருந்து விற்பனையாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் சிவ்மோகா மாவட்டத்தின் ஹுனசோடு பகுதியில் செயல்பட்டு வரும் கல் குவாரியில் பாறைகள் உடைக்கும் இடத்தில் ஜெலட்டின் குச்சிகளுடன் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் வெடித்துச் சிதறியது.
இந்த விபத்தில் இதுவரை 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. விபத்து ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக பேசிய மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, ''அதிக அளவிலான ஜெலட்டின் வெடிபொருள்கள் ஒரே இடத்தில் வைக்கப்பட்டிருந்தது. வெடி விபத்திற்கு குவாரி உரிமையாளர் மற்றும் வெடிபொருள் கையாள்பவரின் அலட்சியமும் காரணம்.
இதனால், குவாரி உரிமையாளர் மற்றும் வெடிபொருள் விற்பனையாளர் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்'' என்று கூறினார்.