டோக்யோ: 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜப்பானில் கடந்த 2020-இல் தற்கொலைகள் அதிகரித்திருப்பதாக நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளே, தற்கொலைகள் அதிகரிப்புக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து வெளியான அறிக்கையில், 2020-ஆம் ஆண்டு மட்டும் ஜப்பானில் 20,919 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது 2019-ஆம் ஆண்டைக் காட்டிலும் 750 அல்லது 3.7 சதவீதம் அதிகமாகும்.
2009-ஆம் ஆண்டு முதலே ஜப்பானில் தற்கொலைகள் தொடர்ந்து குறைந்து வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 2020-இல் 13,943 ஆண்களும், 6,976 பெண்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில்லாமல், ஜப்பானில் கடந்த 2020-ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 440 பள்ளிச் சிறார்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
கரோனா பொதுமுடக்கத்தால் தங்களது வாழ்க்கை முறை, பொருளாதார காரணிகளில் ஏற்பட்ட மாற்றத்தால் இந்த அளவுக்கு தற்கொலைகள் அதிகரித்திருப்பதாக சுகாதாரத் துறை நம்புகிறது.