புது தில்லி: நாட்டில் இதுவரை 10.43 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கி 6 நாள்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை மொத்தம் 10.43 லட்சம் மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நாடு முழுவதும் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 10,43,534 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,37,050 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக கர்நாடகத்தில் 1,38,807 பேருக்கும், ஆந்திரத்தில் 1,15,365 பேருக்கும், ஒடிசாவில் 1,13,623 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 42,947 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.