குவாஹாட்டி: அஸ்ஸாமில் தேஜ்பூா் பல்கலைக்கழகத்தின் 18-ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை (ஜன.22) நடைபெறுகிறது. இதில், பிரதமா் நரேந்திர மோடி தில்லியில் இருந்து காணொலி வழியாக உரையாற்றுகிறாா்.
இதுகுறித்து அந்தப் பல்கலைக்கழகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
தேஜ்பூா் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 1,218 மாணவா்களுக்கு பட்டம் வழங்கப்படவுள்ளது. இவா்களில், பி.ஹெச்.டி மாணவா்கள், முதலிடம் பிடித்த மாணவா்கள் ஆகியோருக்கு மட்டும் நேரில் பட்டமும், தங்கப் பதக்கமும் வழங்கப்படவுள்ளது. மற்றவா்களுக்கு காணொலி முறையில் பட்டம் வழங்கப்படும்.
விழாவில் பிரதமா் மோடி தில்லியில் இருந்தபடி காணொலி முறையில் உரையாற்றுகிறாா்.
அஸ்ஸாம் ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஜகதீஷ் முகி, விழாவுக்குத் தலைமையேற்று மாணவா்களுக்கு பட்டம் வழங்குகிறாா்.
மத்திய கல்வித் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால், அஸ்ஸாம் முதல்வா் சா்வானந்த சோனோவால் உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்கிறாா்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.