நாட்டின் எல்லை மற்றும் கடலோரப் பகுதிகளில் உள்ள 1,100 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தேசிய மாணவர்கள் படைக்காக கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
தில்லியில் நடைபெற்ற தேசிய மாணவர் படை அணிவகுப்பில் அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார்.
தேசிய மாணவர் படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு பிறகு பேசிய அவர், தேசிய மாணவர் படையை விரிவாக்கம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார். கடலோர மற்றும் எல்லைப் பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.
இதுவரை பின் தங்கிய பகுதிகளைச் சேர்ந்த 1,100 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தேசிய மாணவர் படையில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
தேசிய மாணவர் படையில் 28 சதவிகித பெண்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது 33 சதவிகித பெண்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். தேசிய மாணவர் படையின் மூலமும் பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு வருகிறது.
தேசிய மாணவர் படையை சேர்ந்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறினார்.