புது தில்லி: நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கி 5 நாள்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை மொத்தம் 7.86 லட்சம் மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நாடு முழுவதும் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புதன்கிழமை மாலை 6 மணி வரை 1,12,007 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 82 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 7,86,842 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் 36,211 பேர், ஆந்திரத்தில் 22,548 பேர், மகாராஷ்டிரத்தில் 16,261 பேர், மத்திய பிரதேசத்தில் 6,731 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.