பெங்களூரு: பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள வி.கே.சசிகலாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் பெங்களூரு அரசு மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துக் குவித்த வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று 2017 பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் பெங்களூரு, பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் வி.கே.சசிகலா அடைக்கப்பட்டுள்ளார். அவரது தண்டனைக் காலம் முடிவடைந்து வரும் ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையாக உள்ளார். அவர், தனக்கு காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் இருப்பதாக சிறை அதிகாரிகளிடம் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவுக்கு கரோனாவுக்கான ஆன்டிஜென் சோதனை உள்ளிட்ட அனைத்து சோதனைகளும் நடத்தப்பட்டன. பரிசோதனையில் அவர் கரோனாவால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் ஆர்.டி.-பி.சி.ஆர். சோதனையின் முடிவுகள் வியாழக்கிழமை தெரியவரும். எனினும், பெங்களூரு, சிவாஜி நகரில் உள்ள பெüரிங் அரசு மருத்துவமனையில் சசிகலா தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறையிலிருந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்து வரப்பட்ட சசிகலா, சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே மருத்துவமனைக்குள் சென்றார். அங்கு அவருக்கு காய்ச்சல், மூச்சுத் திணறல் பிரச்னைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மருத்துவர்கள் சசிகலாவைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கரோனா சோதனை முடிவுகள் இறுதியாகத் தெரிய வந்ததும், அவருக்கு அடுத்தகட்ட சிகிச்சை குறித்து மருத்துவர்கள் முடிவு செய்வர் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.