ஜம்மு-காஷ்மீரில் உறைபனிக் காலத்தின் உச்சமாக மிகவும் குளிர்ந்த வெப்பநிலை நிலவி வருகின்றது. இதன் காரணமாக, நீர்நிலைகள், குடிநீர் குழாய்களில் பனிக்கட்டியாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது,
காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகரில் மைனஸ் 7 டிகிரியாக பதிவாகியுள்ளது. இதற்கு முந்தைய தினம் மைனஸ் 6 டிகிரி செல்சியசாக பதிவாகி இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள குல்மார்க் பனிச்சறுக்கு ரிசார்டில் நேற்றிரவு மைனஸ் 7.8 டிகிரி செல்சியஸாக பதிவானது. இதற்கு முந்தைய நாள் இரவு மைனஸ் 6.5 டிகிரி செல்சியஸாக இருந்தது.
காசிகுண்டில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 8.8 டிகிரி செல்சியஸாகவும், வடக்கு காஷ்மீரின் குப்வாராவில் மைனஸ் 5.9 டிகிரி செல்சியஸாகவும், கோக்கர்நாக்கில் மைனஸ் 6.9 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது.
நடப்பாண்டில் பெரும் பனிப்பொழிவு நிலவி வருவதால் காஷ்மீர் பிரதேசத்தின் பெரும்பகுதி கடும் பனிப்பொழிவில் சிக்கியுள்ளது. பல இடங்களில் உறைநிலைக்குக் கீழ் (மைனஸ் டிகிரி) வெப்பநிலைக்குச் சென்றுவிட்டது. இதன் காரணமாக காஷ்மீரப் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் நீர்நிலைகள் உறைந்துவிட்டன. குறிப்பாக இரவுநேர வெப்பநிலை மேலும் கீழே இறங்கியுள்ளது.
குடிநீர் குழாய்களும் உறைந்துள்ளதால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. உயரமான பகுதிகளில் பனிப்பொழிவு கூடுதலாக உள்ளது.
அதிகாலை நேரத்தில் கடும் உறைபனி நிலவி வருவதால் வாகன ஓட்டிகளுக்கு வாகனம் ஓட்டுவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 31-ம் தேதி வரை இந்த நிலை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.