விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்குத் தடை கோரி மத்திய அரசு சார்பில் தொடரப்பட்ட மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
குடியரசு நாளன்று தில்லியில் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளன.
இதனிடையே குடிரசு நாளன்று விவசாயிகள் பேரணி நடத்துவதற்கு எதிராக மத்திய அரசின் கீழ் செயல்படும் தில்லி காவல்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதில், விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் அனுமதி அளிக்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவின் மீதான விசாரணை இன்று (ஜன.20) உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது மத்திய அரசின் மனுவை விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.
பேரணியை அனுமதிப்பது குறித்து காவல்துறையினர் தான் முடிவு செய்ய வேண்டும். சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் காப்பது அவர்கள் பணி என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
போராட்டம் குறித்து முடிவெடுக்க வேண்டிய அதிகாரிகளே நீதிமன்றத்தை நாடுவதை ஏற்க முடியாது என்று குறிப்பிட்டு மனுவின் மீதான விசாரணைக்கு நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.