வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது தொடர்பாக மத்திய அரசுடன் நடைபெற்ற விவசாயிகளின் 10ஆம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.
இதனையடுத்து வரும் ஜனவரி 22-ஆம் தேதி அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஏற்கெனவே நடைபெற்ற 9 கட்ட பேச்சுவார்த்தையில் எந்த சமரச முடிவும் எட்டப்படாத நிலையில், இன்று (ஜன. 20) 10-ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கிய இந்த பேச்சுவார்த்தையில் விவசாய சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும், மத்திய அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.
மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தில்லி விஞ்ஞான் பவனில் சுமார் 3.30 மணி நேரமாக நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரும் விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளாததால் விவசாய சட்டங்கள் தொடர்பான பிரச்னையில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.
இதனையடுத்து வரும் 19-ஆம் தேதி 10-ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திட்டமிட்டபடி குடியரசு தினத்தில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் பங்கேற்கும் டிராக்டர் பேரணி நடைபெறும் என விவசாய சங்கப் பிரதிநிதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.