மேற்கு வங்கத்தில் பனிமூட்டம் காரணமாக நேரிட்ட பயங்கர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2.5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டம் துப்குரி நகரில் பனிமூட்டம் காரணமாக போதிய வெளிச்சம் இல்லாததால் நேரிட்ட சாலை விபத்து ஏற்பட்டது. இதில் 4 சிறுவர்கள் உள்பட 14 பேர் பலியாகினர். 18 பேர் காயமடைந்தனர். அனைவரும் மூன்று கார்களில் திருமணத்துக்குச் சென்ற போது இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதனிடையே விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு சார்பில், பிரதமர் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும் படுகாயமடைந்தவர்களுக்கு ரு.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மாநில அரசு சார்பிலும் உயிரிழந்தோருக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் நிவாரண நிதியிலிருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2.5 லட்சமும் படுகாயமடைந்தவர்களுக்கு ரு.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.