புது தில்லி: புதிய வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க தயார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு அறிவித்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக தில்லி எல்லையில் தொடர் போரட்டங்களை நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் மத்திய அரசுக்கு இடையே இதுவரை பத்து கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.
ஆனால் இரு தரப்புமே தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதால் இதுவரை உறுதியான முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
இந்நிலையில் புதிய வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க தயார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இத்தொடர்பாக புதனன்று நடைபெற்ற பத்தாவது கட்ட பேச்சுவார்த்தையின் போது, புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க தயார் என மத்திய அரசு அறிவித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.