ஜல்பைகுரி: பனிமூட்டம் காரணமாக சாலையில் போதிய வெளிச்சம் இல்லாததால் மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டம் துப்குரி நகரில் நேரிட்ட சாலை விபத்தில் சிக்கி 14 பேர் பலியாகினர். 18 பேர் காயமடைந்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்களில் 4 சிறுவர்களும் அடங்குவர். அனைவரும் மூன்று கார்களில் திருமணத்துக்குச் சென்ற போது இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.
திருமண நிகழ்ச்சிக்காக மூன்று கார்களில் புறப்பட்ட உறவினர்கள், துப்குரி அருகே தவறான சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே கற்கள் ஏற்றி வந்த டிரக் மீது கார்கள் வேகமாக மோதியது. ஒரு கார் மோதிய வேகத்தில், அடுத்தடுத்து வந்து கொண்டிருந்த இரண்டு கார்களும் விபத்தில் சிக்கியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பனிமூட்டம் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் இந்த விபத்து நேரிட்டதாகக் கூறப்படுகிறது.
விபத்து குறித்து தகவல் அறிந்த காவலர்களும், அருகே இருந்த கிராம மக்களும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். 18 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டிரக்கின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.