குஜராத்தின் சூரத் மாவட்டத்தில் சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதிய விபத்தில் 15 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளனர்.
ராஜஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் நேற்று நள்ளிரவு கிம்-மாண்ட்வி சாலையில் தூங்கிக்கொண்டிருந்த நிலையில், இன்று அதிகாலை சரக்கு லாரி ஒன்று கரும்புகளை ஏற்றிவந்த டிராக்டருக்கு வழிவிடும்போது இந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்து, சூரத்திலிருந்து 60 கி.மீ தூரத்தில் உள்ள கோசாம்பா கிராமத்திற்கு அருகே நிகழ்ந்துள்ளது. லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் படு காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளார். அவரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும், விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.