புது தில்லி: அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மருத்துவர் வி. சாந்தா மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, புற்றுநோய்க்கு மிகச் சிறந்த மருத்துவம் கிடைக்க அனைத்து முன்முயற்சிகளையும் மேற்கொண்டதற்காக மருத்துவர் வி. சாந்தா எப்போதும் நினைவில் கொள்ளப்படுவார். ஏழை மற்றும் எளியோருக்கு புற்றுநோய் சிகிச்சை அளிப்பதில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை முன்னணியில் செயல்பட்டு வருகிறது.
கடந்த 2018-ஆம் ஆண்டு, அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வருகை தந்ததை நினைவுகூர்கிறேன், மகத்தான சேவையாற்றி வந்த மருத்துவர் வி. சாந்தா மறைவுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதய நோய் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவர் சாந்தா (93) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மருத்துவர் சாந்தாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.