கரோனா தொற்று பரவலால் எண்ணெய் உற்பத்தி நாடுகளில் ஏற்பட்ட உற்பத்தி இழப்பே பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்குக் காரணம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றியமைத்து வருகின்றன. இதனால் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் திங்கள்கிழமை பேசிய மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறைந்த உற்பத்தியால் நாட்டில் எரிபொருள் விலை அதிகரித்து வருவதாகத் தெரிவித்தார்.
நாட்டின் எரிபொருள் தேவையில் பெரும்பான்மையானவை இறக்குமதியையே சார்ந்திருப்பதாகத் தெரிவித்த அமைச்சர் பிரதான் கரோனா தொற்று பரவலின் காரணமாக பல எண்ணெய் உற்பத்தி நாடுகள் தங்களது எண்ணெய் உற்பத்தியை நிறுத்தியது மற்றும் குறைத்ததன் காரணமாக பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வருவதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் எரிசக்தி துறையில் தன்னிறைவு அடைய மின்சார வாகனங்கள், சூரிய சக்தி பயன்பாடு, எத்தனால் உற்பத்தி போன்றவற்றில் அரசு கவனம் செலுத்தி வருவதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டார்.