காலநிலை மாற்றத்தால் நாட்டின் தென் மாநிலங்களின் இயற்கையான மழைப்பொழிவில் மாற்றம் ஏற்பட்டு வருவதாக சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தின் பாதிப்புகள் சமீப காலத்தில் அதிகம் பேசுபொருளாகி உள்ளன. அதீத வெப்பம், சீரற்ற வானிலை, மழைப்பொழிவில் மாற்றம் என முன்னெப்போதும் இல்லாத பாதிப்புகள் உணரப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பூமத்திய ரேகையின் வெப்பமண்டலப் பகுதிகளில் காலநிலை மாற்றத்தால் மழைப்பொழிவில் சீரற்ற தன்மை நிலவி வருவதாக ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
நேச்சர் கிளைமேட் சேலஞ்ச் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின் படி கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் இந்தியப் பெருங்கடலின் வெப்பமண்டல பகுதிகளில் மழைப்பொழிவானது அதிகரிக்கும் வெப்பமயமாதலின் காரணமாக மாற்றத்தை சந்தித்து வருவதாகவும் இது எதிர்காலத்தில் தென்னிந்தியப் பகுதிகளில் வெள்ள பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலத்தில் அதிகரித்து வரும் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை சுட்டிக்காட்டியுள்ள இந்த ஆய்வானது 2100 ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய பல்லுயிர் மற்றும் உணவுப் பாதுகாப்பு அபாயக் கட்டத்தை அடையலாம் எனத் தெரிவித்துள்ளது.