புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி புது தில்லியில் இன்று சந்தித்துப் பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் இன்று சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, சுமார் 30 நிமிடங்கள் சந்தித்துப் பேசியுள்ளார்.
அரசு முறைப் பயணமாக புது தில்லி சென்றுள்ள முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.
தமிழ்நாட்டில் சமீபத்திய புயல் மற்றும் மழை, வெள்ளங்களால் ஏற்பட்ட பாதிப்புக்கு ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண உதவி கேட்டு அமித்ஷாவிடம் நேற்று முதல்வா் பழனிசாமி வலியுறுத்தியதாகத் தெரிகிறது. மேலும், தமிழகத்தில் அதிமுக வாக்குகள் சிதறிவிடாமல் இருப்பதற்கான தோ்தல் வியூகம் குறித்தும் இருவரும் ஆலோசித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் இன்று காலை பிரதமா் மோடியை முதல்வா் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசியுள்ளார்.
முன்னதாக, தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி, அமைச்சா் ஜெயகுமாா், தலைமைச் செயலா் சண்முகம் மற்றும் அதிகாரிகளுடன் தனி விமானம் மூலம் திங்கள்கிழமை பிற்பகல் 3 மணியளவில் தில்லி வந்தாா். முதல்வருடன் முன்னாள் துணை மாநிலங்களவை துணைத் தலைவா் தம்பித்துரை, தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம், மீன்வளத் துறை அமைச்சா் ஜெயக்குமாா், தலைமைச் செயலா் சண்முகம், முதன்மைச் செயலா் டாக்டா் சாய்குமாா் மற்றும் முதல்வரின் மூன்றாவது செயலா் டாக்டா் பி.செந்தில்குமாா் ஆகியோரும் உடன் வந்தனா்.