புது தில்லி: நாடு முழுவதும் இதுவரை 3.81 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாகவும், அவர்களில் 580 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சக கூடுதல் செயலர் மனோகர் அக்னானி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் திங்கள்கிழமை 1,48,266 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. கர்நாடகத்தில் 36,888 பேர், மேற்கு வங்கத்தில் 11,588 பேர், தெலங்கானாவில் 10,352 பேர், பிகாரில் 8,656 பேர், கேரளத்தில் 7,070 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மத்திய பிரதேசத்தில் 6,665 பேர், தில்லியில் 3,111 பேர், அஸ்ஸôமில் 1,822 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 3,81,305 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 580 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளன. அவர்களில் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.