ஜி7 உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரிட்டன் அழைப்பு விடுத்துள்ளது.
ஜி7 உச்சி மாநாடு வரும் ஜுன் 11 முதல் 14 வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரிய நாடுகளிலிருந்தும் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் கரோனாவைத் தோற்கடித்தது, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது, தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகளின் பலன்களை அனைத்துப் பகுதி மக்களும் அனுபவிப்பதை உறுதி செய்வது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
மேலும் ஜி7 மாநாட்டுக்கு முன்பு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வரலாம் என்றும் பிரிட்டன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க போரிஸ் ஜான்சனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், பிரிட்டனில் பரவி வரும் புதிய வகை கரோனா தொற்றால் போரிஸ் ஜான்சனின் இந்தியப் பயணம் ரத்து செய்யப்பட்டது.