நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படத் தொடங்கிய நிலையில், தேசியத் தலைநகா் வலயப் பகுதியான (என்சிஆா்) கௌதம புத்த நகரில் முதல் நாளான சனிக்கிழமை 600 சுகாதார ஊழியா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
முன்னதாக கெளதம புத்த நகரின் நொய்டா மற்றும் கிரேட்டா் நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் 6 இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி சனிக்கிழமை தொடங்கியது. பாங்கலில் உள்ள சமூக மருத்துவ மையத்தில் மாவட்ட ஆட்சியா் சுஹாஸ் மற்றும் தலைமை மருத்துவ அதிகாரி தீபக் ஓஹ்ரி முன்னிலையில் சுகாதார ஊழியா் ஒருவருக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனா்.
முதல் நாளான சனிக்கிழமை கெளதம்புத் நகா் மாவட்டத்தில் 600 சுகாதார ஊழியா்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாவட்ட தடுப்பூசி திட்ட அதிகாரி டாக்டா் நீரஜ் தியாகி தெரிவித்தாா்.
செக்டாா் 30-இல் பிஜிஐ மருத்துவமனை, செக்டாா் 27-இல் கைலாஷ் மருத்துவமனை, பாங்கலில் உள்ள சமூக மருத்துவ மையம், பிஸ்ராக்கில் உள்ள சமூக மருத்து மையம், அரசு மருத்துவ அறிவியல் நிலையம் மற்றும் கிரேட்டா் நொய்டாவில் உள்ள சாரதா மருத்துவமனை ஆகிய இடங்களில் தடுப்பூசிகள் போடப்பட்டன.
முதல் கட்டமாக கெளதம்புத் நகருக்கு 28,840 கோவிஷீல்டு தடுப்பூசிகள் பெறப்பட்டன என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனா்.