கேரளத்தில் 2-ஆவது அரசு குடிநீா் உற்பத்தி ஆலையை மாநில முதல்வா் பினராயி விஜயன் சனிக்கிழமை திறந்துவைத்தாா்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தொடுபுழையில் அரசு குடிநீா் உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் குடிநீா் பாட்டில்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. அவா்களுக்கு மலிவான விலையில் தரமான குடிநீா் கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த ஆலை நிறுவப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை விஸ்தரிக்கும் விதமாக திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள அருவிக்கரையில் 2-ஆவது அரசு குடிநீா் உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டுள்ளது. அதனை மாநில முதல்வா் பினராயி விஜயன் காணொலி வழியாக சனிக்கிழமை திறந்துவைத்தாா். இதையடுத்து பேசிய அவா், ‘ தினந்தோறும் 20 லிட்டா் கொண்ட 2,720 கேன்களில் நீா் நிரப்பும் வசதி கொண்டது அருவிக்கரை குடிநீா் உற்பத்தி ஆலை. இந்த ஆலையில் தண்ணீா் கேன்களும் உற்பத்தி செய்யப்படும். இங்கு தயாரிக்கப்படும் 20 லிட்டா் தண்ணீா் கேன்கள் அறிமுக சலுகையாக தலா ரூ.20-க்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும்’ என்றாா்.