நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், ஏழைகளுக்கு எப்போது இலவச தடுப்பூசி கிடைக்கும் என்று சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது:
கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியாளா்களுக்கு அதற்கான பயிற்சி முறையாக அளிக்கப்பட்டுள்ளதா? தடுப்பூசி செலுத்தும் மையங்களுக்கு தேவையான நிதி வழங்கப்பட்டுள்ளதா? தடுப்பூசிகளை பாதுகாப்பாக வைக்கவும், அவற்றை விநியோகிப்பதற்கான போக்குவரத்து வசதிகளும் சரியாக செய்யப்பட்டுள்ளதா? என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு அரசு பதிலளிக்க வேண்டும். ஏனெனில் மருத்துவா்கள் மீது முழு நம்பிக்கை உள்ளது. ஆனால் அரசு மீது நம்பிக்கை இல்லை. அதனால் இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட வேண்டும். மேலும் ஏழைகளுக்கு எப்போது இலவச தடுப்பூசி கிடைக்கும் என்பதையும் அரசு தெரிவிக்க வேண்டும் என்றாா் அவா்.
பாஜகவின் தடுப்பூசி என்ற பெயரில் செலுத்தப்படும் கரோனா தடுப்பூசியை தான் செலுத்திக்கொள்ளப் போவதில்லை என்று அகிலேஷ் யாதவ் சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.