மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்துவது சரியல்ல என்று பாஜக செய்தித் தொடர்பாளர் ஷாஹனாவாஸ் உசேன் தெரிவித்துள்ளார்.
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணியை முன்னெடுத்துள்ளனர். குடியரசு தினத்தன்று நடைபெற உள்ள பேரணிக்கு இது முன்னோட்டம் என்றும் கூறியுள்ளனர்.
இந்நிலையில் விவசாயிகளின் டிராக்டர் பேரணி குறித்து பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷாஹனாவாஸ் உசேன் கூறுகையில்,
'மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெறும்போது விவசாயிகள் எந்தவொரு இயக்கத்திற்கும் அழைப்பு விடுப்பது சரியானதல்ல. மத்திய அரசுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நாளை(ஜன.8) நடைபெறவுள்ளது. அதுவரை விவசாயிகள் காத்திருக்க வேண்டும்.
கடந்த இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகள் நேர்மையாக சுமூகமாக முடிந்துள்ளன. விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாங்கள் இருக்கிறோம்' என்று தெரிவித்தார்.
மேலும் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தவறிவிட்டார் என்று குற்றம் சாட்டிய அவர், 'பாரத் ரத்னாவை காங்கிரஸ் தனது பதவிக்காலத்தில் தகுதியுள்ள பல நபர்களுக்கு வழங்கவில்லை. ஆனால் இப்போது அதே விருதை காங்கிரஸார் சோனியா காந்திக்காக கோரியுள்ளனர் என்று தெரிவித்தார்.