புது தில்லி: தில்லியில் செயின் பறிப்பைத் தடுக்க முயன்ற இளம்பெண் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
வடமேற்கு தில்லியில் அமைந்துள்ள ஆதர்ஷ் நகரில் சனிக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த சிம்ரன் கவுர் என்னும் பெண் தனது தாயார் மற்றும் இரண்டு வயது குழந்தையுடன் சுமார் 09.30 மணியளவில் கடைத்தெருவிற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று குறுக்கிட்ட நபர் ஒருவர் சிம்ரன் அணிந்திருந்த செயினைப் பறிக்க முயன்றுள்ளார். ஆனால் செயினை விடாத சிம்ரன் அந்த நபரைப் பிடித்துள்ளார். இதன்காரணமாக நிலை தடுமாறிய அந்த நபர் கீழே விழுந்துள்ளார்.
உடனே எழுந்த அந்த நபர் தன் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் கத்தியால் சிம்ரனைக் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். உடனே அருகில் இருந்தவர்களால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிம்ரன் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நடந்த சம்பவம் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி ஒன்றில் பதிவாகியுள்ளது.
அதனை அடிப்படையாக வைத்து குற்றவாளியினைக் கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கபட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.